பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரி நகரில் திங்கள்கிழமை முதல் (ஜன. 14) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பை பலப்படுத்த புதுவை காவல் துறை தலைவர் (டி.ஜி.பி.) சுந்தரி நந்தா போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடம், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து போலீஸாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி, பொங்கலை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் 4 நாள்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் போக்குவரத்தைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, போகி பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை, அதாவது ஜனவரி 14 முதல் 17-ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 2 முதல் மறுநாள் காலை 7 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
காணும் பொங்கல் அன்று பகல் முழுவதும், வாகனங்களை தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கார், ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் நகர் பகுதிக்குள் வந்து, செல்வதற்கும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் அன்று கடற்கரைக்கு வருபவர்கள், இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவற்றை நிறுத்துவதற்கு பழைய துறைமுகம், பழைய வடிசாராய ஆலை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.