மாற்றுத் திறனாளிகளுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என புதுச்சேரி அனைத்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இயக்கம் வலியுறுத்தியது.
அந்த அமைப்பின் 2-ஆவது மாநில மாநாடு ஜவகர் சமுதாய நலக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு அந்தச் சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசின் ஆணைப்படி, அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு
4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நூறு சதவீதம் குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ. 7 ஆயிரம், 75 சதவீதம் குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், 40 சதவீதம் குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் என மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக நல வாரியத்தை அமைக்க வேண்டும்.
சிறப்பு ஆணையரை நியமிக்க வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில், வருமான உச்ச வரம்பை முற்றிலும் நீக்கி ஆணை வெளியிட வேண்டும். மாதந்தோறும் இலவச அரிசி, தவறும்பட்சத்தில் ரூ. 600 வழங்க வேண்டும்.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும்.
பொங்கல் போனஸாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா (அ) அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.