புதுவை மாநில எல்லையையொட்டிய தமிழகப் பகுதியான ஆரோவில் சர்வதேச கிராமத்தில் சர்வதேச குதிரையேற்றப் போட்டி வியாழக்கிழமை (ஜன.17) தொடங்கவுள்ளது.
இதுகுறித்து, ஆரோவிலில் உள்ள ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சிப் பள்ளி உரிமையாளர் ஜாக்குலின் கபூர், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
புதுச்சேரி ஆரோவிலில் உள்ள "ரெட் எர்த்' குதிரையேற்ற பள்ளி சார்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் குதிரையேற்றப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, 19-ஆவது ஆண்டாக குதிரையேற்றப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"புதுச்சேரி குதிரையேற்ற சவால் - 2019' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி, ஆரோவில் ரெட் எர்த் குதிரையேற்றப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இரு நாள்களுக்கு, 'டிரெஸ்சேஜ்' பிரிவிலும், ஜன.19, 20-ஆம் தேதிகளில், "ஜம்பிங்' பிரிவிலும் போட்டி நடக்கிறது. முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளை, எஸ்டோனியா நாட்டை சேர்ந்த ஈவாமரியாவும், ஜம்பிங் போட்டிகளை இந்தியாவைச் சேர்ந்த ஆர்.கே. சாமியும் நடுவர்களாக செயல்படுவர்.
சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட 12 கிளப்களை சேர்ந்த 60 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த முறை இந்தியா மட்டுமல்லாது, பிரான்ஸ், ஜெர்மனியைச் சேர்ந்த 100 குதிரைகள் பங்கேற்கின்றன. போட்டியில், 6 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்து கொள்கின்றனர். போட்டிகளை காண அனுமதி இலவசம் என்றார்.