புதுச்சேரியில் திருவள்ளுவர் தினத்தில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்ததாக 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, புதுச்சேரியில் அனைத்து இறைச்சி, மீன் கடைகளையும் புதன்கிழமை மூட நகராட்சி
நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நகராட்சி உத்தரவை மீறி பல இடங்களில் புதன்கிழமை தடையை மீறி இறைச்சி கடைகள் விற்பனை நடைபெற்றன. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள், போலீஸார் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது தடையை மீறி திறக்கப்பட்ட 7 கடைகளை மூடச் செய்து, அந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர்.
இதேபோல திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று கலால்துறை அறிவித்தது. இருப்பினும் பல இடங்களில் ரகசியமாக மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் கலால்துறை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் தலைமையில் 4 பறக்கும் படை அமைக்கப்பட்டு, புதுச்சேரி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்தனர்.