அரசுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வெள்ளிக்கிழமை பரிசுகளை வழங்கினார்.
புதுவை அரசின் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணகளுக்கு வ.சுப்பையா நினைவு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற
அரசுப் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி பங்கேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று (2017-18) சிறப்பிடம் பெற்ற 5 மாணவர்களுக்கு ரூ. 8 ஆயிரம், 8 மாணவர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என மொத்தம் 13 மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 49 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் அந்தத் துறை இயக்குநர் சாரங்கபாணி, சுகந்தி, உதவி இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.