ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை அரசு சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
புதுவை அரசு முதல் கட்டமாக 7 கலைக் கல்லூரி, ஒரு சட்டக் கல்லூரிக்கு 7- ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையைக் கடந்த வாரம் அமல்படுத்தியது.
முன்னதாக, அரசு சொசைட்டி கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், புதுவை மாநிலத்தில் உள்ள 18 சொசைட்டி கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் தங்களுக்கும் 7 -ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதைக் கண்டித்தும், உடனடியாக 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில், ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும், 6- ஆவது ஊதியக் குழுவில் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தியும், ஜனவரி 18- ஆம் தேதி முதல் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, குருமாம்பேட்டில் உள்ள ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, காலாப்பட்டில் உள்ள பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 18 கல்லூரிகளின் எதிரே அந்தக் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் தெரிவித்தனர்.