புதுச்சேரியில் தேசிய கணித தின கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை அறிவியல் இயக்கம், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பு ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கணித மேதை சீனிவாச ராமானுஜரின் பிறந்த தினத்தை தேசிய கணித தினமாகக் கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு, சிறப்பு கருத்தரங்கம், கண்காட்சி, ராமானுஜர் குறித்த ஆவணப்படம் திரையிடல் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
நிகழாண்டு கருத்தரங்கம், கண்காட்சி, ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சிகள் புதுச்சேரி லாசுப்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை அறிவியல் இயக்கத் தலைவர் அமுதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு கணிதத் திறன் முக்கியத்துவம் மற்றும் ராமானுஜர் கணிதத் துறைக்கு ஆற்றியுள்ள பங்கு குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக, புதுவை அறிவியல் இயக்கத் துணைத் தலைவர் சேகர் வரவேற்றார். பள்ளித் துணை முதல்வர் தமிழ்ச்செல்வி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். புதுவை அறிவியல் இயக்கச் செயலர் அருண் நாகலிங்கம் நோக்கவுரையாற்றினார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட லோகஸ் கணித மைய நிறுவனர் யோகி, அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். கருத்தரங்கில், "கணிதம் பற்றிய வரலாறு' என்ற தலைப்பில் நாட்டில் சிறந்து விளங்கிய கணித மேதைகளைப் பற்றிய படத்துடன் கூடிய தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிறைவாக, கணித மேதை ராமானுஜர் பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்வில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி அதற்கான தீர்வுகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர். கருத்தரங்கில் புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் அரவிந்த், ஜெயந்தி உள்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.