வள்ளலார் தினத்தையொட்டி, வருகிற 21 -ஆம் தேதி புதுவையில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை துணை ஆணையர் ஜ.தயாளன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி கலால் சட்டம் 1970 விதிகளின்படியும், கடந்த 2018 ஜூன் 4 -ஆம் தேதியிட்ட புதுவை மாநில அரசிதழ் எண் 77- இல் கூறப்பட்ட நிபந்தனை எண் 36 -இன்படியும், புதுவை பகுதியில் உள்ள அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு, வருகிற
21- ஆம் தேதி (திங்கள்கிழமை) மூடப்பட வேண்டும்.
அன்றைய தினம் அனைத்து இடங்களிலும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது புதுவை கலால் சட்டத்தின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.