புதுவையில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதுவை மாநில பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான புதுவை- தமிழக இணை பொறுப்பாளர், கர்நாடக மாநில எம்எல்ஏ ரவி, தமிழ்நாடு மாநில பொதுச்செயலர் நரேந்திரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். புதுவை - தமிழக இணை பொறுப்பாளர் ரவி பேசுகையில், புதுவையில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மோடி மீண்டும் ஆட்சி அமைக்க அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும்.
அதற்காக, மத்திய அரசின் திட்டங்களையும், அதன் பயனாளிகளையும் அடையாளம் கண்டு வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்றார். பாஜக நிர்வாகிகள் கூறுகையில், புதுவை மக்களவைத் தொகுதியில் 350 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.