நூறு நாள் வேலை வழங்காததைக் கண்டித்து, புதுச்சேரி மடுகரையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுவை மாநிலம், மடுகரை கிராமப் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சரிவர தரவில்லை என்றும், வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுவரை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கவில்லையாம்.
இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மடுகரை அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியலின் போது, 100 நாள் வேலை வழங்க வேண்டும், ராம்ஜி நகர் பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, மின் விளக்கு வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சாலை மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மடுகரை போலீஸாரும், வட்டார வளர்ச்சி அலுவலர் மலர் உள்ளிட்ட அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இன்னும் 10 நாள்களுக்குள் 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ராம்ஜி நகரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.