புதுச்சேரி கோரிமேடு சாலையில் நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறை ஊழியர்கள் இணைந்து திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
புதுச்சேரியில் பொதுப் பணித் துறை, நகராட்சி அதிகாரிகள் மாநில, தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து முக்கிய சாலைகளில் 2 -ஆம் கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஏற்கெனவே 100 அடி சாலை, விழுப்புரம் சாலை, கடலூர் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது திண்டிவனம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் சந்திப்பிலிருந்து கோரிமேடு எல்லை வரை சாலையின் இருபுறமும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள், விளம்பரத் தட்டிகள் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளற் சந்திரசேகரன், வட்டாட்சியர் செளமியா ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் அகற்றினர்.
அப்போது, அதிகாரிகளிடம் கால அவகாசம் கேட்டும், வரி கட்டுவதாகவும் வியாபாரிகள் சிலர் வாக்குவாதம் செய்தனர். அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், ரமண கேந்திரம் வழிபாட்டுத் தலம் எதிரே வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதுதவிர, தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை அருகே வாய்க்கால் மீது இருந்த பெட்டிக் கடைகளும் அகற்றப்பட்டன.