புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,053 வழக்குகளுக்கு தீர்வுகள் காணப்பட்டன.
தேசிய சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான பாப்டே உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவருமான மணிக்குமார் வழிகாட்டுதலின் பேரில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற தொடக்க நிகழ்ச்சியில் புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி வரவேற்றார்.
புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும், புதுவை தலைமை நீதிபதியுமான தனபால் தொடக்கி வைத்தார். இதில், வழக்குரைஞர் சங்கத் தலைவர் முத்துவேல், துணைத் தலைவர் கமலினி, செயலர் தாமோதரன் மற்றும் நீதிபதிகள், அரசு வழக்குரைஞர், அரசுத் துறை, காப்பீடு, வங்கி அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்ற
னர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், முதன்மை சார்பு நிலை நீதிபதியுமான ராபர்ட் கென்னடி ரமேஷ் நன்றி கூறினார். சமாதானமாகக் கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், கணவன்-மனைவி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் என நிலுவை மற்றும் நேரடி வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதற்காக புதுச்சேரியில் 9 அமர்வுகளும், காரைக்காலில், மாஹேவில் தலா ஒரு அமர்வும் செயல்பட்டன.
மொத்தம் 6,868 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,053 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ. 5 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 763-க்கு தீர்வு காணப்பட்டது.
இவற்றில் 887 நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.