புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வரும் எழுத்தாளர் கி.ரா.வை கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை நேரில்சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக மகளிரணிச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, தனது கணவர் அரவிந்தனுடன் வெள்ளிக்கிழமை காலை புதுச்சேரி வந்தார். பின்னர், லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வசித்து வரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை கனிமொழி எம்.பி. சந்தித்தார்.
கி.ராஜநாராயணன் தனது கையெழுத்துடன் மூன்று நூல்களை கனிமொழியிடம் வழங்கினார். சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்த கனிமொழி தனது கணவருடன் அங்கிருந்து புறப்பட்டார். இதேபோல, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமனை கனிமொழி சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயமடைந்த புதுவை மாநில திமுக நிர்வாகி வை.பாலாவை அவரது வீட்டில் கனிமொழி சந்தித்து நலம் விசாரித்தார்.