பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப் புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித் துறை தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை படிக்கும் சுமார் 50 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ளஅரசுப் பள்ளிகள் திறக்கும் நாளான வருகிற 10- ஆம் தேதி அல்லது அதற்கடுத்த ஒரு வாரத்துக்குள் பாடப் புத்தகங்களை வழங்க கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கடலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பாடப் புத்தகங்கள் தட்டாஞ்சாவடி எழுதுபொருள் அச்சகத் துறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பாடப் புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி. ருத்ரகவுடு கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் தமிழகத்திலிருந்து வந்துள்ளன. ஒன்றாம் வகுப்பு உள்ளிட்ட ஒரு சில வகுப்புகளுக்கான புத்தகங்கள் வர வேண்டியுள்ளது. இருப்பினும், முடிந்தவரை பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கண்டிப்பாக பள்ளிகள் திறந்த ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும். இதற்காக தீவிரமாகச் செயலாற்றி வருகிறோம் என்றார் அவர்.