பாகூர் அருகே தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்கிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுவை மாநிலம், பாகூர் பழைய காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பாபு (34). பேருந்து ஓட்டுநர். இவர், வியாழக்கிழமை இரவு புதுச்சேரியிலிருந்து பாகூர் நோக்கி தனியார் பேருந்தை இயக்கினார்.
இந்தப் பேருந்து கன்னியக்கோவில் பிரிவிலிருந்து பாகூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. பேருந்தை நிறுத்திவிட்டுப் பார்ப்பதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த கல்வீச்சில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து மீது கல்வீசி தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.