நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர்

நிபா வைரஸ் தாக்கம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் படே தெரிவித்தார்.

நிபா வைரஸ் தாக்கம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் படே தெரிவித்தார்.
நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் பணிபுரிந்து வந்த கடலூரைச் சேர்ந்த ஒருவர், ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு பிரத்யேக வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் படே கூறியதாவது: நிபா வைரஸ் தொடர்பாக புதுவை மாநிலத்தில் உள்ளவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. 
புதுவை மாநில அரசு சார்பிலும், ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் நிபா வைரஸை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நிபா வைரஸ் காய்ச்சல் இருக்குமோ என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் ரத்த மாதிரிகள் புணேயில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே காய்ச்சல் குறித்து உறுதியான தகவல் கிடைக்கும் என்றார் அவர்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் கூறியதாவது:  நிபா வைரஸ் கேரளா மாநிலத்தில் பரவலாக உள்ளதால், கேரளத்திலிருந்து புதுவைக்கு பேருந்துகள், ரயில் மூலம் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என புதுவை சுகாதாரத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். 
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து புதுவை மக்கள் பயப்படத் தேவையில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com