புதுவை அரசு நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான புதிய புத்தகங்கள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் பொது நூலகமான ரோமன் ரோலண்ட் நூலகத்தைத் தவிர, மொத்தம் 55 கிளை நூலகங்கள் இயங்கி வருகின்றன. அதே போன்று, காரைக்காலில் 18, ஏனாமில் 2, மாஹேவில் 3 நூலகங்கள் உள்ளன.
இந்த நூலங்களுக்கு ஆண்டுதோறும் கலை, பண்பாட்டுத் துறை சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்கி, வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழலில் போட்டித் தேர்வுகளை மாணவ, மாணவிகள் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. "நீட்' உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள அரசு நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை வாங்க கலை, பண்பாட்டுத் துறை முடிவு செய்தது. அதற்காக, எந்த ஆண்டும் இல்லாத அளவில் ஆதிதிராவிடர் சிறப்புக் கூறு நிதி ரூ.21 லட்சம் செலவிலும், பிற நூல்களுக்காக ரூ.29 லட்சம் செலவிலும் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையிலான புத்தகங்கள் 90 சதவீதம் வாங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் நல சிறப்புக் கூறு நிதியில் வாங்கப்பட்ட புத்தகங்கள் ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் 13 கிளை நூலகங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசன் கூறியதாவது: போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், நிகழாண்டு ரூ.50 லட்சத்தில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் ஏராளமான புத்தகங்கள் நூலகங்களில் இடம் பெற்றுள்ளன.
எனவே, போட்டித் தேர்வுகளை எழுத உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார் அவர்.