புதுச்சேரி, ஜூன் 13: வில்லியனூர் அருகே பைக் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆணைவாரி பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (28). இவருக்கு வியாழக்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில், புதன்கிழமை துணி எடுப்பதற்காக தனது காரில் உறவினர்கள் ராஜி, சித்ரா, கெளதமி, ரோசி, தெல்சி, பேச்சி, ஹன்சி ஆகிய 8 பேருடன் புதுச்சேரிக்கு வந்தார். காரை வீரா என்பவர் ஓட்டி வந்தார்.
விழுப்புரம் - புதுச்சேரி சாலை மதகடிப்பட்டு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே கார் வந்த போது, அங்கு, சாலையைக் கடக்க முயன்ற பெண்ணின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் வீரா காரை வலது புறமாகத் திருப்பினாராம். அப்போது, திருவாண்டார்கோயில் சின்னபேட்டை பகுதியில் இருந்து ஒரே பைக்கில் வந்த சுந்தரராஜன் மகன் பிரேம்குமார் (19), திருபுவனை சிலோன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஜீவரத்தினம் (19) ஆகியோர் மீது கார் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பிரேம்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஜீவரத்தினம் மற்றும் காரில் வந்த அரசன் உள்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் காயமடைந்த அனைவரையும் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த புதுச்சேரி மேற்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸார், பிரேம்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.