ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, ஜூலை மாதம் முதல் தீவிரப் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக சமுதாயக் கல்லூரி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி அரசின் சமுதாயக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் டி.ராம்குமார் தலைமை வகித்தார்.
பொருளாளர் என்.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு செயல்படுத்தும் அதே சமயத்தில், சமுதாயக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என எங்களது சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, எங்களை அழைத்துப் பேசிய புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதாகத் தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவை ஒப்புதல் கடந்த மார்ச் 7-ஆம் தேதி வழங்கப்பட்டு, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், அரசு கல்லூரிப் பேராசிரியர்களுக்கு மட்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 7-ஆவது ஊதியக் குழு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, முதல்வர் அளித்த வாக்குறுதியின்படி, சமுதாயக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
இதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். தவறும்பட்சத்தில், வரும் ஜூலை மாதம் முதல் தீவிரப் போராட்டங்களில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.