புதுவை மாநிலத்தில் நீட் தேர்வு அடிப்படையிலான படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்டாக் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீட் தேர்வு அடிப்படையிலான படிப்புகளுக்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் காலக்கெடுவை வரும் 21-ஆம் தேதி வரை சென்டாக் நிர்வாகம் நீட்டித்துள்ளது.
அதன்படி, மாணவ, மாணவிகள் இணையதளம் வழியாக நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதேபோல, புதுவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், புதுச்சேரியைச் சேர்ந்த 792 மாணவர்களுக்கும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 295 மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரலாம் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.