பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சியளிக்க வேண்டும் என புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்தச் சங்கத்தின் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரதேச தலைவர் இராஜ.வேணுகோபால் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பா.ராமலிங்கம், பொருளாளர் ஞா.பாக்கியவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுச்சேரியை இயற்கை வேளாண் பிரதேசமாக மாற்றுவதற்கு நிகழ் கல்வியாண்டில் புதுச்சேரியில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு நாள், ஒரு பாடவேளையில் மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்து கல்வித் துறை பயிற்சியளிக்க வேண்டும். இதில், இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல் குறித்தும், பாரம்பரிய பயிர் ரகங்களின் வகைகள், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் விரிவாக செயல்விளக்கத்துடன் பாடம் கற்பிக்க வேளாண் துறையும், கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.