உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட மயானங்களில் சடலங்களை புதைக்கவும், தகனம் செய்யவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் மு.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின்படி, உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட மயானங்களில் சடலங்களை புதைப்பதற்கு ரூ.2,000-ம், தகனம் செய்வதற்கு ரூ.3,500-ம், மறுநாள் சடங்குக்கு ரூ.500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருவடிக்குப்பம் மயானத்துக்கு ஏ.அருண்நேருவும், பவழக்காரன்சாவடி மயானத்துக்கு கே.முருகனும், சண்முகாபுரத்துக்கு ஆர்.புனிதாவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்பாளர்கள் மயானப் பகுதிகளை முறையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும்படியும், புதைக்கப்படும் அல்லது தகனம் செய்யப்படும் சடலங்கள் பற்றிய தகவல்களை பாதுகாக்கும்படியும், இது தொடர்பான பதிவேடுகள் மற்றும் காவல் நிலைய, நகராட்சி உத்தரவுகள் ஆகியவற்றை முறையாக பராமரிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது கருவடிக்குப்பத்தில் இயங்கி வரும் எரிவாயு மின் தகன மேடையை தற்காலிகமாக ஏ.அருண்நேரு பொறுப்பாளராக இருந்து கவனிப்பார். அங்கு சடலங்களை தகனம் செய்ய ரூ.2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே கட்டணம் செலுத்தி தகன நேரத்தை பதிவு செய்துகொள்ள வேண்டும். மயானம் சம்பந்தமான புகார்களை உழவர்கரை நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண் 0413-2200382, கட்செவி அஞ்சல் எண் 7598171674 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.