திருபுவனை பகுதியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
திருபுவனை பாங்கி தெருவைச் சேர்ந்தவர் மலைச்சாமி (50). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மேலும், மற்ற நேரங்களில் விவசாய வேலையும் செய்து வந்தார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், மலைச்சாமி செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த அய்யம்பெருமாளுக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கு வேலைக்குச் சென்றார். அங்குள்ள மோட்டார் பம்ப்செட் அருகே மலைச்சாமி கடப்பாரையால் பள்ளம் தோண்டியபோது, பள்ளத்துக்கு அடியில் சென்ற மின்சார வயரில் கடப்பாரை உரசியதால் மின்கசிவு ஏற்பட்டு, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மலைச்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருபுவனை காவல் ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார், மலைச்சாமியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.