தையல் கலைஞர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என புதுவை பிரதேச தையல் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
புதுவை பிரதேச தையல் கலைஞர்கள் சங்க (சிஐடியூ) மாநில குழுக் கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் செயலர் கே.தியாகராஜன் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் எம். கலைவாணி, துணைச் செயலர் எஸ்.பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தையல் கலைஞர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி அரசு தையல் கலை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்தி, ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தீபாவளி உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அனைத்து தையல் கலைஞர்களுக்கும் வங்கி மூலம் கடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ் மாநில தையல் சம்மேளன பொதுச் செயலர் எம்.ஜடாஹெலன், தலைவர் பி.சுந்தரம், சிஐடியூ தமிழ் மாநில துணைத் தலைவர் டி.ஏ.லதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.