மீன் வாங்கச் சென்ற வியாபாரி மாயம்: போலீஸார் விசாரணை

புதுச்சேரியில் மீன் வாங்கச் சென்ற வியாபாரி மாயமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் மீன் வாங்கச் சென்ற வியாபாரி மாயமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் தட்டாஞ்சாவடி காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (45), மீன் வியாபாரி. தினமும் அதிகாலையில் தேங்காய்த்திட்டு துறைமுகம் சென்று மீன் வாங்கி வருவார். அங்கு மீன் கிடைக்காதபட்சத்தில் பெரிய மார்க்கெட்டுக்கு செல்வார். மீன் வாங்குவதற்காக ரூ. 20 ஆயிரம் வரை பணம் எடுத்துச் செல்வாராம். வழக்கம்போல, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்து கணேசன் தனது பைக்கில் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவர் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கோ அல்லது பெரிய மார்க்கெட்டுக்கோ செல்லவில்லை. என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.
 அவரது செல்லிடப்பேசி தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே தனியார் பள்ளி பகுதியில் உள்ள சாலையில் கிடந்தது.
 இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கணேசனின் மனைவி மற்றும் முதலியார்பேட்டை போலீஸார், அப்பகுதியில் கணேசனை தேடிய போது, அங்குள்ள புதரில் அவரது மோட்டார் பைக் கிடந்தது. அதன் அருகே கணேசன் அணிந்திருந்த உடைகள் ரத்தக் கரையுடன் கிடந்தன. சற்று தொலைவில் கணேசன் வைத்திருந்த நோட்டு, காகிதங்கள் சிதறிக் கிடந்தன.
 எனவே, கணேசனுக்கு ஏதோ நடந்துள்ளது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த அமைச்சர் நமச்சிவாயமும் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, போலீஸாரிடம் கணேசனை விரைவில் கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com