புதுச்சேரி உருளையன்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையம் சார்பில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, புதுவை அரசின் மகளிர் துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட அங்கன்வாடி மையங்கள் சார்பில் அருந்ததிபுரம் அங்கன்வாடி மையத்தில் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குயவர்பாளையம் சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அஜ்மல் தலைமை வகித்தார். பொதுச் சுகாதார மருத்துவ செவிலிய அதிகாரி கீதா முன்னிலை வகித்தார். இதில் 4 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், ரெட்டியார்பாளையம் பவழ நகர் அங்கன்வாடி மையம் சார்பில் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் செல்லிடப்பேசியில் உள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு, செல்லிடப்பேசி அதிகளவு பயன்படுத்துவதால் கண்களுக்கு ஏற்படும் குறைபாடு ஆகியவை குறித்து எடுத்துக் கூறி கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான கீரை, காய்கள் உள்கொள்ளும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
போஷன் பக்வாடா திட்டத்தின் விழிப்புணர்வு செயல்பாடு குறித்து கையெழுத்து இயக்கத்திலும் மாணவிகளிடம் கையொப்பம் பெறப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பவழநகர் அங்கன்வாடி ஒருங்கிணைப்பாளர் வசந்தா, உதவியாளர் வசந்தி ஆகியோர் செய்திருந்தனர்.