தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிகள் வெளிநடப்பு: பொதுமக்களை அனுமதித்ததற்கு எதிர்ப்பு

புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களை அனுமதித்ததால்

புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களை அனுமதித்ததால் ஆத்திரமடைந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
புதுவையில் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடனான மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச் 15-இல் நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் துறை அறிவித்திருந்தது.
அதன்படி, கூட்டம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான டி. அருண் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மாவட்ட தேர்தல் அதிகாரி சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் பெத்தபெருமாள், முன்னாள் எம்எல்ஏ நீலகங்காதரன், என்ஆர் காங்கிரஸ் முன்னாள் சேர்மன் நடராஜன், அதிமுக, திமுக, பாஜக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
இதே போல, சுயேச்சையாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தனர். வந்திருந்த அனைவருக்கும் போதுமான இருக்கை வசதிகள் செய்யப்படாததால் பலரும் நின்ற
படியே கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனிடையே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனக் கூறிவிட்டு, சுயேச்சைகள், பொதுமக்கள் என பலரையும் கூட்டத்தில் அனுமதித்ததற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சுயேச்சைகள், பொதுமக்களை கூட்டத்தில் பங்கேற்க வைத்தது தங்களை அவமதிப்பது போல உள்ளது என குற்றஞ்சாட்டி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்திலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
அரசியல் கட்சியினர் வெளிநடப்பு செய்தாலும், சுயேச்சைகள், பொதுமக்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

33 பறக்கும் படைகள்
புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகளுடனான தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி 
டி. அருண் பேசியதாவது:
தேர்தலையொட்டி புதுச்சேரியில் 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைகளில் 20 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தொகுதி வாரியாக 102 செக்டார் அதிகாரிகளும், 10 விடியோ கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com