புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையைப் பிரித்து ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ். அண்ணா சாலையில் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். புதன்கிழமை காலை சதீஷ் வழக்கம் போல, கடையைத் திறந்து உள்ளே சென்ற போது, அங்கிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்ததாம்.
மேலும், கடையில் இருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள 10 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்து செல்லிடப்பேசிகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில், பெரியகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செல்லிடப்பேசிகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.