புதுச்சேரியில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி லாசுப்பேட்டை சத்யா சிறப்பு பள்ளி பின்புறமுள்ள பகுதியில் கும்பல் ஒன்று புதன்கிழமை இரவு ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக லாசுப்பேட்டை மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர்கள் நாகராஜ், கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீஸார் அங்கு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள இருட்டான பகுதியில் 12 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீஸார் வருவதைக் கண்ட அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பியோடினர். இவர்களில் 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்த கத்திகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், மூவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மடுவுபேட்டையைச் சேர்ந்த முரளியின் ஆதரவாளர்களான நெருப்புக்குழு சேகர் (எ) முத்துசேகர் (30), வெங்கடேசன் (24), புதுசாரத்தைச் சேர்ந்த கெüதமன் (24) என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், மடுவுபேட்டையைச் சேர்ந்த முரளியின் உறவினரான ரெüடி பார்த்திபன் தலைமையில் 12 பேர் கும்பல் எதிராளிகளை பழி தீர்க்கும் வகையிலும், வழக்கு விசாரணை செலவுக்கு பணம் தேவைப்படுவதால் அந்த வழியாகச் செல்லும் தொழிலதிபர்களை மிரட்டி கொள்ளையடிக்கவும் திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய 9 பேரை தேடி வருகின்றனர்.