புதுவை மாநிலம், திருக்கனூரில் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருக்கனூரில் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த உண்டியலை பெயர்த்து, பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால், வெல்டிங் இயந்திரத்தின் உதவியுடன் திறக்க முயன்றுள்ளனர்.
ஆனாலும், திறக்கமுடியவில்லை. இதனால், மர்ம நபர்கள் உண்டியலை அப்படியே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். புதன்கிழமை காலை கோயில் கணக்காளர் கோயிலுக்கு வந்த போது கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம், கோயில் நிர்வாகி கண்ணன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து, திருக்கனூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.