நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, அங்கன்வாடி ஊழியர்கள் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
புதுவையில் அங்கன்வாடியில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, அவர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டபோது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள், 2 மாத ஊதியத்தை உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை வாக்குறுதி அளித்தபடி ஊதியம் வழங்கப்படவில்லையாம்.
இதையடுத்து, 2 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, புதுவை அரசின் மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர்கள் புதன்கிழமை திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத் தலைவர் ராஜலட்சுமி, செயலர் தாட்சாயினி, பொருளாளர் முருகவேணி ஆகியோர் தலைமை வகித்தனர். இவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்திவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர்.