புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தலையொட்டி, புதுச்சேரியில் 33 பறக்கும் படைகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், மது கடத்தலைத் தடுக்க புதுச்சேரி முழுவதும் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தவளக்குப்பத்தை அடுத்துள்ள இடையார்பாளையம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரியதர்ஷினி தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடலூரில்
இருந்து புதுச்சேரி நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, அந்த காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.6 லட்சத்து 500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், காரில் வந்தவரிடமும் விசாரணை நடத்தினர்.
இதில், அவர் கடலூர் - புதுச்சேரி சாலையில் இயங்கி வரும் டைல்ஸ் கடையின் உரிமையாளர் அசோக் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை புதுச்சேரி கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.