ஜிப்மரில் புதுவை நோயாளிகள் அலைக்கழிப்பு செய்யப்படுவது தொடர்பாக முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும் என்று புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமிக்கு அந்தக் கூட்டமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்துள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், புதுவை மாநில நோயாளிகளுக்கு அளிக்காமல் அலைக்
கழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. மேலும், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதால், அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் செய்யப்படுகிறது.
ஆனால், புதுவை மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் என்றால் அவர்களது அறுவை சிகிச்சைக்கு காலம் கடத்துவதும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கட்டாயப்படுத்துவதும், ஜிப்மர் மருத்துவர்களுடன் தொடர்பு வைத்துள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு நிர்பந்திப்பதும் நடக்கிறது.
மேலும், வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சில சதவீதம் புதுவை நபர்களை பணியமர்த்த வேண்டுமென முன்னாள் பிரதமர் நேரு அளித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால், தற்போது ஜிப்மர் நிர்வாகம் ஒப்பந்தப் பணிக்குக்கூட முழுமையாக வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை நியமிக்கிறார்களே தவிர, புதுவை மாநில மக்களைப் புறக்கணித்து வருகின்றனர். ஜிப்மர் நிர்வாகத்தின் அத்து மீறிய செயல்களைத் தடுத்து, புதுவை மக்களின் உயிரைக் காக்க, உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
எனவே, முதல்வர் நாராயணசாமி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருமுறை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். ஜிப்மர் நிர்வாகம் புதுவை அரசுக்கு வழங்கிய ஒப்பந்த அடிப்படையிலான அனைத்து உரிமைகளையும் கேட்டுப் பெற வேண்டும். புதுவை மக்களுக்கும் தமிழக அரசைப் போல, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.