சேதராப்பட்டு அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி பணம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்றதாக 2 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹருசிகேஷ் ஷாகூ (43). இவர், கடந்த 25 ஆண்டுகளாக புதுவை மாநிலம், சேதராப்பட்டில் தங்கி, அங்குள்ள தனியார் தொழில்சாலையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த பரத் பெயிண்டராக வேலை பார்த்தார்.
இந்த நிலையில், ஹருசிகேஷ் ஷாகூ சம்பள பணம் ரூ.8 ஆயிரத்துடன் சனிக்கிழமை மாலை வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். கரசூர் அருகே சென்றபோது, பரத், அவருடன் வந்த ஒரு இளைஞர் சேர்ந்து ஹருசிகேஷ் ஷாகூவை வழிமறித்து, சம்பள பணத்தைக் கேட்டனராம். பணத்தை தராததால் ஹருசிகேஷ் ஷாகூவின் கழுத்தில் அவர்கள் கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது.
பின்னர், அவரிடமிருந்த சம்பள பணம் ரூ.8 ஆயிரம், செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு பரத், அவருடன் வந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டனராம். காயமடைந்த ஹருசிகேஷ் ஷாகூவை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சேதராப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து, பரத் மற்றும் அடையாளம் தெரியாத அவரது கூட்டாளியைத் தேடி வருகின்றனர்.