சேதராப்பட்டு அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி பணம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹருசிகேஷ் ஷாகூ (43), புதுச்சேரி அருகேயுள்ள சேதராப்பட்டில் தங்கி, அங்குள்ள தனியார் தொழில்சாலையில் ஊழியராகப் பணிபுரிகிறார்.
கடந்த 11 ஆம் தேதி ஹருசிகேஷ் ஷாகூ இரவுப் பணி முடிந்து, கரசூர் ஏரிக்கரைச் சாலையில் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த இரு நபர்கள், அவரை கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்த சம்பளப் பணம்
ரூ. 8 ஆயிரம், செல்லிடப்பேசியை வழிப்பறி செய்து தப்பியோடிவிட்டனர். காயமடைந்த ஹருசிகேஷ் ஷாகூவை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சேதராப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என ஹருசிகேஷ் ஷாகூ கூறியதை அடுத்து, போலீஸார், சாமிப்பிள்ளைத் தோட்டம் வாஞ்சிநாதன் வீதியைச் சேர்ந்த ஹேமந்த் குமார் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், ஹருசிகேஷ் ஷாகூவிடம் வழிப்பறி செய்ததை மேற்கண்ட இருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, இருவரையும் திங்கள்கிழமை கைது செய்த போலீஸார், ஹேமந்த்குமாரை காலாப்பட்டு மத்திய சிறையிலும், சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர்.