ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: புதுவை முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் தொடங்கி நாகை மாவட்டம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுவையில் 274 கிணறுகள் வெட்டப்படவுள்ளன.
 இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கிலோ மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 இதேபோல, புதுவை மாநிலத்தில் புதுச்சேரி பிராந்தியத்தில் 2 சதுர கிலோ மீட்டரும், காரைக்காலில் 39 சதுர கிலோ மீட்டருக்கும் கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரை கடற்கரையை ஒட்டிய பகுதிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்குதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 2 சதுர கிலோ மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏம்பலம், மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
 மணவெளி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஆர்.கே.ஆர்.அனந்தராமன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினார்.
 ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான கந்தசாமி திங்கள்கிழமை கூறியதாவது:
 சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழில்சாலைகள், திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்காது என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நான்தான் உள்ளேன். பெரிய மாநிலங்களே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
 சிறிய மாநிலமான புதுவையில் இதுபோன்ற திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும். எனவே, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.
 இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
 ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதுவை அரசுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. புதுவையை பொருத்தவரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டம் புதுவையில் செயல்படுத்தப்பட மாட்டாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com