புதுச்சேரியில் 5 மாத நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரி, பாசிக் ஊழியர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவை பாசிக் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 57 மாதங்களாக நிலுவை ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதைக் கண்டித்து, பாசிக் ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் 5 மாத சம்பளம் வழங்கப்படும் என அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அந்த ஊதியம் வழங்கப்படவில்லையாம்.
இதனால், அதிருப்தியடைந்த பாசிக் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஐடியூசி பாசிக் ஊழியர்கள் முன்னேற்றச் சங்கத் தலைவர் ஆர்.ரமேஷ், செயலர் கே.முத்துராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சம்பளம் வழங்கப்படாததால் குடும்பச் செலவுக்கு பணமில்லாமல் அவதியுற்று வரும் பாசிக் ஊழியர்களுக்கு உடனடியாக அரசு அறிவித்த 5 மாத நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஏஐடியூசி மாநில செயல் தலைவர் வி.எஸ்.அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச் செயலர் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்ததும் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பாசிக் ஊழியர்கள் தெரிவித்தனர்.