வில்லியனூர் அருகே அரசுப் பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (47) ஓட்டிச் சென்றார்.
வில்லியனூரை அடுத்த வடமங்கலம் பகுதியில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் பேருந்து மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால், பேருந்தில் வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து மீது கற்களை வீசிவிட்டு தலைமறைவான மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.