புதுவையில் மின் கட்டண உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் மருத்துவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையை ஆளும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு தொடர்ந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன், அதற்கு நேர்மாறாகவும் செயல்பட்டு வருகிறது.
மேலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநில அரசால் உயர்த்தி வசூலிக்கப்படும் அனைத்து கட்டணங்களும், வரிகளும் குறைக்கப்படும் என்றும் உறுதியளித்தது.
ஏற்கெனவே 2016-இல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு, எப்படி 2019-இல் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று கேள்வி எழுப்பி மக்கள் நீதி மய்யம் பிரசாரம் செய்தது.
தற்போது, தேர்தல் முடிவு வெளியானவுடனேயே மின் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் வாக்களித்த மக்களை அரசு வஞ்சித்துள்ளது.
புதுவையை ஆளும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி, 100 யூனிட் வரை 50 சதவீத கட்டணச் சலுகை என்பதை 200 யூனிட் வரை என உயர்த்தி அறிவிப்பதுடன், அந்த சலுகையை உடனடியாக அமலுக்கும் கொண்டு வர வேண்டும்.
இல்லையெனில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயல்படும் அரசு என்பதை தொடர் பிரசாரம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்வோம் என அதில் கூறப்பட்டுள்ளது.