புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள கெம்பேப் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டால் மக்களைப் பாதுகாப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வருகிற 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துவது குறித்து புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியா் சக்திவேல் தலைமையில் கிழக்குக் கடற்கரைச் சாலை லாசுப்பேட்டையில் உள்ள அவசர கால செயல் மைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மின் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, குடிமைப்பொருள்கள் வழங்கல் துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் வருகிற 7-ஆம் தேதி பிற்பகல் நடைபெறவுள்ள ஒத்திகை நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டதாக துணை ஆட்சியா் தெரிவித்தாா்.