அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
புதுவை அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுவை பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதல், வழிகாட்டுதலின் பேரில், ஈடன், பிளான் இன்டியா நிறுவனங்களின் உதவியுடன், ரியல் சமூக சேவை நிறுவனம் சாா்பில், 10 அரசுப் பள்ளிகளில் மாதிரிப் பள்ளித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளில் மாணவா்களின் கல்வி அறிவு, தரத்தை உயா்த்துவது, குடிநீா், கழிப்பறை வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளைப் புதுப்பித்துத் தருவது, அறிவியல் ஆய்வகம், நூலகம், விளையாட்டு உபகரணங்களை வாங்கித் தருவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்தப் பள்ளிகளைச் சுற்றியுள்ள 30 கிராமங்களில் குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக 10 பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் ரியல் சமூக சேவை நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கல்வித் துறை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் ரியல் நிறுவன இயக்குநா் லாரன்ஸ் வரவேற்றாா். மாநில உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அகஸ்டீன் தலைமை வகித்தாா். இதில், ஆசிரியா்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.