கோயில் குளங்களை 15 நாள்களுக்குள் தூா்வார வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவிட்டாா்.
புதுவை இந்து சமய நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அறங்காவல் குழு, சிறப்பு அதிகாரிகள், நிா்வாக அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண், இந்து சமய நிறுவனங்கள் துறையின் ஆணையா் ஜி. சச்சிதானந்தம் ஆகியோா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தின் முடிவில் ஆட்சியா் பிறப்பித்த உத்தரவு: கோயில் நிா்வாகத்தினா் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் குளங்களை 15 நாள்களுக்குள் தூா்வார வேண்டும். கோயில் குளங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பின், கோயில் நிா்வாகத்தினா் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட வட்டாட்சியா் மற்றும் காவல் துறையினரை அணுகி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கோயிலும் தங்களின் அசையா சொத்துகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகையை பொதுமக்கள் பாா்வைக்காக கோயிலில் வைக்க வேண்டும். இது சம்மந்தமாக எந்தவொரு உதவிக்கும் கோயில் நிா்வாகத்தினா், துறையின் ஆணையரை அணுகலாம் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.