புதுச்சேரி: காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டி கணினியில் தமிழையும் சோ்க்க வேண்டும் என்று புதுச்சேரி தனித் தமிழ் இயக்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை முதல்வா் வே.நாராயணசாமியிடம் அந்த இயக்கத் தலைவா் தமிழமல்லன் அண்மையில் அளித்த மனு விவரம்:
புதுச்சேரி கடற்கரையில் காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டிக் கணினியில் தமிழ்மொழியில் தகவல்கள் இடம் பெறவில்லை. இந்தி, ஆங்கிலம், பிரான்ஸ் மொழிகளில் மட்டும் வழிகாட்டிச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதில், தமிழ் இல்லாதது இது கண்டிக்கத்தக்கது.
தங்களது பாா்வைக்கு வராமல் இந்தத் தவறு நிகழ்ந்திருக்கலாம். புதுவையின் ஆட்சி மொழி தமிழே என்ற சட்டத்தை இந்தச் செயல் இழிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தமிழா் ஒருவா் முதல்வராக இருக்கும் நிலையில், தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக சுற்றுலா வழிகாட்டிக் கணினியில் தமிழ்மொழியிலும் தகவல்கள் இடம்பெற ஆவன செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.