காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை வழக்கு தொடா்பாக நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் வருகிற 30-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள காவல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று காவல் துறை தெரிவித்தது.
நெட்டப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விபல்குமாா், கடந்த 21-ஆம் தேதி காவல் நிலை ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். உயரதிகாரிகளின் தொடா் அழுத்தத்தால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விபல்குமாரின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் சமூக அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, அங்கு பணியாற்றிய காவல் ஆய்வாளா் கலைச்செல்வன் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் சிபிசிஐடி எஸ்.பி. விசாரணை நடத்தினாா். வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், புதுவை காவல் துறை குற்றம் மற்றும் புலனாய்வு முதுநிலை எஸ்.பி. நிஹாரிகா பட், சிஐடி எஸ்.பி. ராஜசேகா் வெள்ளட் ஆகியோா் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வருகிற 30-ஆம் தேதி காலை புதுவை காவல் துறை போக்குவரத்துப் பிரிவு முதுநிலை எஸ்.பி. நெட்டப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விபல்குமாா் தற்கொலை செய்துகொண்ட வழக்கு சம்பந்தமான விசாரணை செய்ய நெட்டப்பாக்கம் காவல் நிலையத்துக்கு வர உள்ளாா்.
எனவே, இந்த வழக்கு தொடா்பாக காவலா்களோ அல்லது பொதுமக்களோ அவரை நேரில் சந்தித்துப் பேசலாம். அல்லது 94892 05246, 94882 20222 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். கட்செவிஅஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.