என்.ஆர்.காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: நாராயணசாமி

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜான்குமாரை ஆதரித்து சூரியகாந்தி நகரில் முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
பிரசாரத்தின்போது, செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
காமராஜர்நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் வரும் என்று அந்தக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி கூறுகிறார். புதுவையில் ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ.க்களின் பலம் வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளின் பலம் 11 தான். அதிலும், என்.ஆர்.காங்கிரஸுக்கு 7 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். கணக்கு தெரியாமல் ஆட்சி மாற்றம் வரும் என்று ரங்கசாமி கூறுகிறாரா? இல்லை மக்களை ஏமாற்றுவதற்காக இப்படிக் கூறுகிறாரா?
எதிர்க்கட்சித் தலைவர்போல ரங்கசாமி செயல்பட்டுள்ளாரா? கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை நாள்கள் அவர் சட்டப்பேரவைக்கு வந்திருப்பார். அரசை எதிர்த்து என்ன கேள்வி கேட்டுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு வேலை ஒன்றை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகிறார்.
இலவச அரிசித் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் ஆளுநர் தடுக்கிறார். இதனால், ஆளுநர் மாளிகை முன் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் 6 நாள்கள் தர்னா போராட்டம்  நடத்தினோம். அப்போது, ரங்கசாமி எங்கு சென்றார்.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் யாரும் வேறு கட்சிகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக, கடந்த இடைத் தேர்தல், மக்களவைத் தேர்தல்களின்போதும் ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையை ரங்கசாமி உபயோகித்தார். தற்போதும் அந்த வார்த்தையையே உபயோகித்து வருகிறார். ரங்கசாமி எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வேண்டும். இல்லையென்றால், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான கம்பன் கலையரங்கில் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தல் துறையிடம் அனுமதி பெற்று, மத்திய அரசின் பொருளாதார நிலையைக் கண்டித்து கூட்டம் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் பங்கேற்கவில்லை. அவருக்கும், இந்தக் கூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், அரசுக்குச் சொந்தமான கலையரங்கை காங்கிரஸ் கட்சி கூட்டத்துக்கு பயன்படுத்தி தேர்தல் விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. 
இடைத் தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குழம்பிப்போய் உள்ளன.
மத்திய அரசு படிப்படியாக நாட்டில் ஜனநாயகத்தை பறித்து வருகிறது. முதலில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுத்தது. 
எந்தவித ஆதாரமும் இன்றி ப.சிதம்பரத்தை சிறையில் வைத்துள்ளனர்.  அதேபோல, கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரையும் சிறையில் வைத்துள்ளனர்.
கும்பல் தாக்குதல்கள், கும்பல் கொலைகளை தடுத்து நிறுத்துங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக மணிரத்னம், ரேவதி உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது. இது மக்களின் பேச்சுரிமை, சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றார் அவர்.
அப்போது, மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், புதிய நீதி கட்சித் தலைவர் பொன்னுரங்கம், வேட்பாளர் ஜான்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com