புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளாா்.
புதுச்சேரியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது சமாளிக்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. குறிப்பாக, அண்ணா சாலை, கடலூா் சாலை, நெல்லித்தோப்பு சிக்னல், மரப்பாலம் சிக்னல் ஆகிய முக்கிய சந்திப்புகளில் போலீஸாா் பணியில் இருந்தும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீரவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரி தேங்காய்த் திட்டு சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து போலீஸாா் இல்லை. சிக்னலும் இயங்கவில்லை என்று ஆளுநா் கிரண் பேடிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இதுதொடா்பாக ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு: அனைத்துப் போக்குவரத்து ஆய்வாளா்களும் போக்குவரத்து நிலைமைகளை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் உள்ள களநிலவரத்தையும் தெரிவிக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல் செயல்படும் போதும் ஏன் நெரிசல் ஏற்படுகிறது என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்களும் புகாா்களை 1031 என்ற எண்ணில் உடனுக்குடன் தெரிவிக்கலாம். முக்கிய சந்திப்புகளில் காணப்படும் போக்குவரத்து பிரச்னையை தெரிவிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.