செப்டம்பரில் 390 போலீஸார் நியமனம்: முதல்வர் தகவல்

புதுவையில் செப்டம்பர் மாதம் 390 போலீஸார் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவையில் செப்டம்பர் மாதம் 390 போலீஸார் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நடைபெற்ற விவாதம்:
வி.சாமிநாதன் (நியமன எம்எல்ஏ): புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எத்தனை பேர் பதிந்துள்ளனர்? கடந்த 30 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது?
அமைச்சர் கந்தசாமி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2,12,181 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 6,395 பேருக்கு அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
சாமிநாதன்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என அறிவித்தீர்கள். ஆனால், பலருக்கு 50 வயதைக் கடந்தும், அவரது மகனுக்குக்கூட வேலை கிடைக்கவில்லையே? தொழில்நிறுவனங்கள், ஐ.டி. பார்க் தொடங்கப்படாததால் தனியார் வேலைவாய்ப்புகள்கூட கிடைக்கவில்லை.
அமைச்சர் கந்தசாமி: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் புதிய தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. பலர் தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். இதனால், தனியார் துறையில் வேலை வழங்குவதில் சிரமம் உள்ளது. பிரதமரே 2 கோடி பேருக்கு வேலை என அறிவித்தார். ஆனால், வேலை கொடுத்துவிட்டாரா?
சங்கர் (நியமன எம்எல்ஏ): கடந்த 30 ஆண்டுகளில் 6 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கொடுத்துள்ளீர்கள். இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், தற்போது பதிவு செய்துள்ள 2 லட்சம் பேருக்கு வேலை வழங்க 590 ஆண்டுகளாகும். 
அமைச்சர் கந்தசாமி: அப்படிப் பார்த்தால் மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலை வழங்க 50 ஆயிரம் ஆண்டுகளாகும்.
முதல்வர் நாராயணசாமி: காவல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளோம். செப்டம்பர் மாதம் 390 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தொடர்ந்து 800 பணியிடங்களை பல்வேறு துறைகளில் நிரப்ப உள்ளோம். இதேபோல, ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களையும் நிரப்ப உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com