புதுவையில் செப்டம்பர் மாதம் 390 போலீஸார் நியமிக்கப்பட உள்ளனர் என முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நடைபெற்ற விவாதம்:
வி.சாமிநாதன் (நியமன எம்எல்ஏ): புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எத்தனை பேர் பதிந்துள்ளனர்? கடந்த 30 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது?
அமைச்சர் கந்தசாமி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2,12,181 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 6,395 பேருக்கு அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
சாமிநாதன்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என அறிவித்தீர்கள். ஆனால், பலருக்கு 50 வயதைக் கடந்தும், அவரது மகனுக்குக்கூட வேலை கிடைக்கவில்லையே? தொழில்நிறுவனங்கள், ஐ.டி. பார்க் தொடங்கப்படாததால் தனியார் வேலைவாய்ப்புகள்கூட கிடைக்கவில்லை.
அமைச்சர் கந்தசாமி: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் புதிய தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. பலர் தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். இதனால், தனியார் துறையில் வேலை வழங்குவதில் சிரமம் உள்ளது. பிரதமரே 2 கோடி பேருக்கு வேலை என அறிவித்தார். ஆனால், வேலை கொடுத்துவிட்டாரா?
சங்கர் (நியமன எம்எல்ஏ): கடந்த 30 ஆண்டுகளில் 6 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கொடுத்துள்ளீர்கள். இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், தற்போது பதிவு செய்துள்ள 2 லட்சம் பேருக்கு வேலை வழங்க 590 ஆண்டுகளாகும்.
அமைச்சர் கந்தசாமி: அப்படிப் பார்த்தால் மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலை வழங்க 50 ஆயிரம் ஆண்டுகளாகும்.
முதல்வர் நாராயணசாமி: காவல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளோம். செப்டம்பர் மாதம் 390 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தொடர்ந்து 800 பணியிடங்களை பல்வேறு துறைகளில் நிரப்ப உள்ளோம். இதேபோல, ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களையும் நிரப்ப உள்ளோம் என்றார்.