பிரதமர் நிவாரண உதவிக்கு 9,055 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக புதுவை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
புதுவை பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேர முடிவில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. கமலக்கண்ணன் பேசியதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் புதுச்சேரி பகுதிக்கு 36 டிராக்டர்களுக்கு ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 1.06 கோடியும், காரைக்கால் பகுதிக்கு 14 டிராக்டர்களுக்கு ரூ. 42 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரிக்கு 15 பவர்டில்லர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 7.50 லட்சமும், காரைக்காலுக்கு 27 பவர் டில்லர்களுக்கு ரூ. 13.50 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டுள்ளன.
நிகழ் நிதியாண்டில் புதுச்சேரி பகுதிக்கு 74 டிராக்டர்களும், காரைக்கால் பகுதிக்கு 16 டிராக்டர்களும், ஏனாம் பகுதிக்கு 6 டிராக்டர்களும், புதுச்சேரிக்கு 42 பவர்டில்லர்களும், காரைக்கால் பகுதிக்கு 25 பவர்டில்லர்களும், ஏனாம் பகுதிக்கு 6 பவர்டில்லர்களும் வழங்க முடிவு செய்து, மத்திய அரசிடம் ரூ. 5 கோடி கோரப்பட்டுள்ளது.
கடந்தாண்டு புதுச்சேரி பகுதிக்கு 250 மெட்ரிக் டன் நெல் விதைகளும், காரைக்கால் பகுதிக்கு 55 மெட்ரிக் டன் நெல் விதைகளும், ஏனாம் பகுதிக்கு 18.5 மெட்ரிக் டன் நெல் விதைகளும் மானிய விலையில் பருவ காலத்தில் வழங்கப்பட்டன. இதற்காக ரூ. 35 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளன.
நிகழ் நிதியாண்டில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை புதுச்சேரி பகுதிக்கு 150 டன் நெல் விதைகளும், காரைக்கால் பகுதிகளில் 60 டன் நெல் விதைகளும், ஏனாம் பகுதிக்கு 7.5 டன் நெல் விதைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பசுந்தாள் உர விதை கடந்தாண்டு புதுச்சேரிக்கு 50 மெட்ரிக் டன்னும், காரைக்கால் பகுதிக்கு 10 மெட்ரிக் டன்னும் 75 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ் நிதியாண்டில் புதுச்சேரி பகுதிக்கு 30 மெட்ரிக் டன்னும், காரைக்கால் பகுதிக்கு 10 மெட்ரிக் டன்னும் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் கிசான் சம்மான் நிதி மூலம் மொத்தம் உள்ள 27,741 விவசாயிகளில் இதுவரை 9,055 பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் விவரம் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6,449 விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 1.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2-ஆம் தவணையாக 4,084 விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சில தொழில்நுட்பக் காரணங்களால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகையை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.