புதுவையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என புதுச்சேரி சமூகநீதிப் பேரவை வலியுறுத்தியது.
புதுச்சேரி சமூக நீதிப் பேரவையின் கூட்டம் முதலியார்பேட்டை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் நிறுவனத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர். விசுவநாதன் தலைமை வகித்தார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு. சலீம், ஒருங்கிணைப்பாளர் து.கீதநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பூர்வீக புதுச்சேரி மக்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்க வேண்டும், தமிழகத்தைப் பின்பற்றி, புதுவையிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வர வேண்டும். விடுபட்ட பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும்.
அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவைக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில, மத்திய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலாக மாற்றிட வேண்டும்.
புதுவையில் உள்ள பல்வேறு சமூகத்தினரின் பொருளாதாரம், சமூக நிலை மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை துல்லியமாக அறிய, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதற்காக புதுவை அரசு அமைத்த குழுவின் காலம் காலாவதியாகிவிட்டது. இதற்காக புதிதாக சமூக சிந்தனையாளர்கள், மானுடவியலாளர்கள் உள்ளடங்கிய குழுவை அரசு நியமனம் செய்ய வேண்டும். நியமனத்துக்குப் பின்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து, பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.