புதுச்சேரி வ.உ.சி. வீதியில் அமைந்துள்ள புதுவை அருங்காட்சியகத்தில், தேசிய மரபு அறக்கட்டளை சார்பில், மகாகவி பாரதியாரின் 98 -ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெத்திசெமினார் பள்ளியில் 3- ஆம் வகுப்பு பயிலும் மாணவரான கெளதம் மோகன்ராசு, பாரதியின் ஆத்திச்சூடியில் இடம்பெற்ற, அச்சம் தவிர் தொடங்கி, சரித்திர தேர்ச்சிக்கொள் வரையிலான வரிகளை எழுதவும் வாசிக்கவும் செய்தார். அமலோற்பவம் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் அன்புச்செல்வன் மகேசுவரமூர்த்தி, சாதி, மத வேறுபாடுகளை களையும் சமுதாய ஒற்றுமைக்கான பாரதியாரின் பாடல்களில், வெள்ளை நிறத்தொரு பூனை என்ற பாடலை மனப்பாடமாக ஒப்பித்தார்.
இதே போல, பாரதியின் தேச உணர்ச்சிப் பாடல்களை அருங்காட்சியக ஆர்வலர்களும், ஊழியர்களும், படிக்கவும் பாடவும் செய்தனர். தேசிய மரபு அறக்கட்டளையின் நிறுவனரும், புதுவை அருங்காட்சியக காப்பாளருமான அறிவன், பாரதியின் படைப்புத் தொண்டுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். எட்டையபுரம், புதுச்சேரி பாரதி அருங்காட்சியகங்களை பற்றி விளக்கினார்.
இந்தியாவை குறிப்பாக புதுவையை ஆட்சி செய்த பிரெஞ்சுக்காரர்களின் தேசிய கீதத்தை இரண்டு முறை பாரதியார் மொழிபெயர்த்தது நினைவுகூரப்பட்டது. தேசிய மரபு அறக்கட்டளையினர், பாரதியின் "வாழ்க நீ எம்மான்' என்ற பாடலைப் பாடி நிகழ்வை நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில், திலகப்பிரியா நாட்டியக் கலைக்கழக மாணவிகள் எலன் கிறிஸ்டினா, இலிஷாந்தி, மர்சினா ஏஞ்சல், மகிந்தனா, மோகன ஸ்ரீ, இருஃபினா ஒதிபெர் மற்றும் தலைமை ஆசிரியர் சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மனோரஞ்சனி ஒருங்கிணைத்தார்.